Friday, April 2, 2010

எனது அன்பான தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் மக்களே....! உங்களனைவருக்கும் எனது அன்பான வேண்டுகோள்.


காலத்தின் தேவைகருதி தமிழ்த்தேசியத்தை மீண்டும் உரத்து வலுப்படுத்துவதற்காக யாழ்ப்பாணம், திருகோணமலை மாவட்டங்களில் உள்ள உங்கள் குடும்பத்தினரை உறவினர்களை அயலவர்கள் நண்பர்கள் அனைவரையும் தமிழ் தேசிய மக்கள் முன்ணனிக்கு ஆதரவு வழங்குமாறு அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கின்றேன்.

தயவுசெய்து தாயகத்தில் உள்ள உங்கள் சகல உறவுகளையும் தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு தமிழ்தேசியத்தை ஆணித்தரமாக இதயசுத்தியுடன் வலியுறுத்தும் தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்வதோடு அவர்களையும் தங்கள் உறவினர்கள், நண்பர்கள், அயலவர்களுக்கும் இந்த செய்தியை தேசிய கடமையை தெளிவுபடுத்தி தெரியப்படுத்துமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

யாழ், திருமலை தேர்தல் மாவட்டங்களில் தமிழ்தேசியமானது அகில இலங்கை காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகின்றது என்பதை தெளிவுபடுத்துவதுடன் ஆகக்குறைந்தது 10 பேருக்காவது இந்த செய்தியை காலத்தின் கட்டாயத்தை தெரியப்படுத்துமாறு வேண்டிக்கொள்கின்றேன்.

“பாராளுமன்றம் போய் எமக்கு எந்தவித உரிமைகளும் கிடைத்துவிடப் போவதில்லை. நாம் எல்லோரும் அறிவோம் ஆனால் எமது தேசியத்திற்காக 35000 மேற்பட்ட சகோதர சகோதரிகளினதும் 150000 மேற்பட்ட எமது மக்களினதும் தியாகங்களை விலை பேசுபவர்கள் அந்நிய சக்திகளின் கைப்பொம்மைகளாக செயல்படுபவர்கள் எம்மை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றம் போகக் கூடாது என்பதே முக்கியமானத ஆகும்.

களமும் புலமும் ஒரே பாதையில் பயணித்து எமது அபிலாசைகளை அரசியல்ரீதியாக அடைய களத்திலே தேசியத்தின் மீது உண்மையாக பற்றுக்கொண்டவர்கள் எமது மக்களின் பிரதிநிதிகளாக தெரிவுசெய்யப்படவேண்டும்.

தேசியத்தின் மீது உண்மையான பற்றுக்கொண்டவர்கள் இன்று யாழ், திருமலை தேர்தல் மாவட்டங்களில் தமிழர் தேசிய மக்கள் முன்ணனியில் போட்டியிடுகின்றார்கள். எனவே அவர்களை எமது பிரதிநிதிகளாக இவர்களுக்கு வாக்களித்து வெற்றியிட செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

எமது தாயகத்தில் உள்ள மக்கள் என்றும் தேசிய உணர்வோடும் தேசியத்தோடும் ஆழ வேரூன்றி உள்ளார்கள். அதனை கடந்தகால தேர்தலகள், பொங்குதமிழ் நிகழ்வுகளில் இராணுவ அடக்குமுறைக்குள் இருந்து வெளிப்படத்தியிருக்கிறார்கள். ஆனால் இன்றைய சூழ்நிலையில் தேர்தலில் தமிழ்தேசியத்திற்கான மக்கள் முன்ணனி தேசியத்தை நிலைநிறுத்தி போட்டியிடுகின்றது என்ற செய்தி எல்லா மக்களையும் சென்று அடையவில்லை.

எனவே மக்களுக்கு தெளிவான செய்தியை அதாவது தமிழ்த்தேசியம் இன்று சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகின்றது. என்பதை தெரிவித்தாலே போதும் எமது மக்கள் தங்கள் ஆதரவுகளை வாக்குப் பலத்தால் வெளிப்படுத்துவார்கள்.

எனவே காலத்தின் தேவை உணர்ந்து மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால் துயரம் அரசியல் மரபில் அமைந்துவிடாதிருக்க முள்ளியவாய்க்காலில் பிராந்திய, சிங்கள கூட்டு சக்திகளால் புதைக்கப்பட்ட எமது தமிழ்தேசிய தேரை தொடர்ந்து இழுத்து எமது அபிலாசைகளை 35000 மேற்பட்ட எங்கள் சகோதர சகோதரிகளின் இலட்சிய கனவை அரசியல்ரீதியில் ( களமும் புலமும் ஒன்றிணைந்து) அடைய நாம் அணைவரும் தமிழ்த்தேசிய முன்ணனியின் வெற்றிக்காக உழைப்போம். தமிழ்த்தேசியம் என்றும் சாய்வதில்லை என்பதை உலகிற்கும் சிங்களத்திற்கும் உணர்த்துவோம்.

அத்தோடு 1949ல் இருத்து அரசியல் செயற்பாட்டை ஆரம்பிப்போம் என்று கூறும் அந்நிய சக்த்திகளின் கைப்பொம்மைகளுக்கும் வெற்றுக்கோசம் இடுபவர்களுக்கும் கூட்டமைப்பின் தவறான தலைமைகளுக்கும் சரியான பாடம் புகட்டுவதோடு பேரினவாத கட்சிகளையும் அதன் அடிவருடிகளையும் தோற்கடிக்க பாடுபடுவோம்.

“ஈழத்தவர்கள் நாம் எல்லோரும் உலகத் தாய் வயிற்று மைந்தர்
நசிந்து இனி கிடக்கமாட்டோம் நாமெல்லாம் நிமிர்ந்து நிற்போம்”

- என்ற பொங்கு தமிழ் வாசகங்களுக்கு வடிவம் கொடுத்து செயற்படுவோம்.

எனக்காக இந்த உதவியை செய்யாவிட்டாலும் எங்களுக்காக தங்கள் உயிர்களை தியாகம் செய்த 35000ற்கு மேற்பட்ட உங்கள் சகோதர சகோதரிகளின் தியாகங்கள் விலை போகாமல் இருக்க அவர்களின் கனவுகள் தொடர்ந்து எடுத்துச் செல்லவாவது இந்த சிறிய கடமையை நாம் அனைவரும் தமிழர் தேசியம், தமிழர் தாயகம், சுயநிர்ணய உரிமை என்ற கொள்கைகளின் வழி நின்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை அமோக வெற்றி பெறச் செய்வோமாக.
- உங்களில் ஒருவன் -

No comments: