இலங்கையின் பொதுத் தேர்தல் முடிவுகள் என்ற தலைப்பில் திரு. இரா . துரைரட்ணம் அவர்கள் எழுதிய கட்டுரையின் பகுதி -02 இற்கான மறுப்புக்களும் மறைக்கப்பட்ட உண்மைகளும் - பகுதி - 01.
இலங்கையின் பொதுத் தேர்தல் முடிவுகள் என்ற தலைப்பில் திரு இரா துரைரட்ணம் அவர்கள் எழுதிய கட்டுரையின் பகுதி - 02 இல் பல தவறான தகவல்கள் - கருத்துக்கள் - முடிவுகள் தரப்பட்டுள்ளன. முதற் கட்டமாக அவர் தனது கட்டுரையின் தலைப்பாகப் போட்டிருந்த "யாழ் மக்கள் தேர்தலைப் பகிஸ்கரிக்கவில்லை " என்ற விடயம் தொடர்பாக அவர் கூறிய கருத்துக்களின் மறுபக்கத்தைப் பார்ப்போம்.
பொதுவாக தரவுகள் - தகவல்களின் அடிப்படியில் ஆய்வினை மேற்கொண்டு முடிவினைப் பெறுவதே சரியான ஆய்வாகும். ஆனால் இங்கு கட்டுரையாளர் முடிவினை எடுத்துவிட்டு அதனை நிரூப்பிபதற்க்கு தவறான தகவல்களையும் தரவுகளையும் தவறான முறையில் கையாண்டுள்ளார். எங்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போலியான வெற்றியை மக்கள் புரிந்து விடுவார்களோ? அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி களங்கப்பட்டு விடுமோ என்ற பய உணர்வினால் தனக்கேற்ப்பட்ட மன உளைச்சலை சீர் செய்வதற்காகக எழுதப்பட்ட கட்டுரையே அதுவாகும்.
இலங்கைப் புள்ளிவிபரத் திணைக்களம் 2008 ம் ஆண்டு எடுத்த கணக்கீடு என்று கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருப்பது தவறு. உண்மையில் 2007 ம் ஆண்டு தான் குடிசன மதிப்பீடு யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. அதன் அறிக்கை தான் 2008 ம் ஆண்டு வெளிவந்ததேயொழிய தரவுகள் 2007 ம் ஆண்டுக்குரியவையாகும். மேலும் இக்குடிசன மதிப்பீடு யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. கிளிநொச்சி நிர்வாக மாவட்டம் இதில் அடங்கவில்லை.
யாழ் தேர்தல் மாவட்டம் என்பது யாழ்ப்பாணம், கிளிநொச்சி என்ற நிர்வாக மாவட்டங்களையும் உள்ளடக்கியதாகும். எனவே யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தின் சனத்தொகையை அடிப்படியாகக் கொண்டு யாழ் தேர்தல் மாவட்டத்தின் வாக்காளர் தொகையை மதிப்பிடுவது சரியானதாக இருக்க மாட்டாது. இதனைக் கட்டுரையாளர் கவனிக்கத் தவறி விட்டார்.
2007 ம் ஆண்டுக் குடிசன மதிப்பீட்டின் படி யாழ்ப்பாண மாவட்டத்தின் மொத்தச் சனத்தொகை 5,59,619 பேராகும். இதில் 3,70,620 பேர் 18 வயதிற்கு மேற்ப்பட்டவர்களாவார். அவ்வாறாயின் இவர்களே யாழ் நிர்வாக மாவட்டத்தின் வாக்காளர் தொகையாகும். இதனைக் கட்டுரையாளரும் ஏற்றுக் கொள்கின்றார். ஆனால் அவர் இத்தொகையை யாழ் தேர்தல் மாவட்டத்தின் வாக்காளர் தொகையாக எடுத்துக் கொண்டு வாக்காளர் தொகையைக் குறைத்துக் காட்டி தனது முடிவினை நியாயப்படுத்த முற்படுகின்றார். இவ் வாக்காளர் தொகையினுள் பின்வருவோர் உள்ளடக்கப்படவில்லை.
1 . கிளிநொச்சி மாவட்ட வாக்காளர் தொகை
2 . இடம் பெயர்ந்தோர் வாக்காளர் தொகை - புத்தளம் மற்றும் ஏனைய இடங்களில் இடம்பெயர்ந்திருக்கும் முஸ்லிம் வாக்காளர் தொகை.
இப் பொதுத் தேர்தலில் கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் 11 ,019 பெரும் இடம்பெயர்ந்தோரில் 6970 பேரும் வாக்களித்திருந்தார்கள். இவர்களின் மொத்தத் தொகை
17,989 பேராகும். இம்முறை யாழ் தேர்தல் மாவட்டத்தில் 1,68,277 பேர் வாக்களித்திருந்தனர். இதிலிருந்து 17989 பேரை நீக்கிய பின்னர் உள்ள தொகையான
1,50,288 பேர் யாழ் நிர்வாக மாவட்டத்தில் உள்ள 10 தேர்தல் தொகுதிகளிலும் வாக்களித்திருந்தனர். யாழ் நிர்வாக மாவட்டத்தில் வாக்களிக்கத் தகுதி உள்ள 3,70,620 பேரில் 1 ,50 ,288 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். இதன் படி 40 சதவீதத்தினர் மட்டுமே வாக்களித்துள்ளனர். யாழ் மாவட்டத்தின் 10 தேர்தல் தொகுதிகளிலும் உள்ள வாக்காளர்கள் வாக்களிக்கச் செல்வதற்கு எதுவித தடைகளும் இருக்கவில்லை. இவர்களுக்கு வாக்களிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. என்று கட்டுரையாளர் கூற மாட்டார் என நம்புகிறேன். இந்நிலையில் இலங்கையில் யாழ் மாவட்டத்திலேயே வாக்களிப்பு வீதம் குறைவாக இருந்துள்ளது. என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும். (கட்டுரையாளருக்கு இது கசப்பான உண்மையாக இருக்கும் ) அண்மையில் நடிபெர்ற ஜனாதிபதித் தேர்தலில் யாழ் நிர்வாக மாவட்டத்தில் உள்ள 10 தேர்தல் தொகுதிகளிலும் 1,68,419 பேர் வாக்களித்திருந்தனர். ஆனால் பொதுத் தேர்தலில் 1,50,288 பேர் வாக்களித்திருந்தனர். இதன் படி இப்பொதுத் தேர்தலில் வாக்களித்தோர் தொகை ஜனாதிபதித் தேர்தலோடு ஒப்பிடும் போது 18,131 பேரால் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சிங்கள தேசத்தின் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதில் காட்டிய அக்கறையைக் கூட தமிழ்த் தேசத்தின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதில் மக்கள் காட்டாமல் இருந்தமைக்கு திரு துரைரட்ணம் அவர்கள் எவ்வாறு விளக்கமளிக்கப் போகிறார்? பொதுவாக எந்தவொரு தேர்தலிலும் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 70 - 75 சதவீதத்தினரே வாக்களிப்பதுண்டு. அவ்வாறாயின் யாழ் நிர்வாக மாவட்டத்தின் உண்மையான வாக்காளர் தொகையான 3,70,620 பேரில் ஏறத்தாழ 2,60,000 பேர் (70 சதவீதம் ) இத்தேர்தலில் வாக்களித்திருக்க வேண்டும். ஆனால் உண்மையில் வாக்களித்தோர் தொகை 1,50,288 பேர் மட்டுமேயாகும். அவ்வாறாயின் ஏறத்தள 1,10,000 பேர் வாக்களிக்காமைக்கு என்ன காரணம்?
இப்பொதுத் தேர்தலில் இலங்கை முழுவதிலும் வாக்களிப்பு வீதம் குறைவாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. இத் தேர்தலில் மக்கள் பெரிதும் அக்கறை காட்டவில்லை என்பது உண்மை தான். தென்னிலங்கையில் மக்கள் இத்தேர்தலில் ஆர்வம் காட்டாமைக்குப் பல காரணங்கள் உண்டு. இத் தேர்தலில் அரசாங்கம் பெரும் வெற்றியடையும் என்பது எல்லோராலும் எதிர்பர்க்கப்பட்டதொன்றாகும். அரசாங்கம் மூன்றிலிரண்டு பங்கு பெரும்பான்மை பெறுமா இல்லையா என்பதே இத் தேர்தலில் பிரச்சினையாக இருந்தது. எதிர்க்கட்சிகள் கூட அரசாங்கம் தோற்கும் என்று ஒரு போதும் கூறவில்லை. மாறாக மூன்றிலிரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காது. என்று தான் பிரச்சாரம் செய்தன.எனவே சிங்கள தேசத்து மக்களுக்கு இத் தேர்தல் சுவாரஸ்யமற்றதாகி விட்டது. ஒரு கிரிக்கெட் போட்டியில் இந்த அணி தான் நிச்சயம் வெல்லும் என்று உறுதியாகத் தெரியுமாயின் அப்போட்டியினைப் பார்வையிடுவதற்கு அவ்வணியின் ஆதரவாளர்களே பெருமளவில் அரங்கிற்குச் செல்வார்கள். அதே போன்றே இத் தேர்தலில் அரசாங்கத்தின் ஆதரவாளர்களே பெருமளவில் வாக்களிக்கச் சென்றனர். எதிர்க்கட்சி வாக்காளர்களோ அல்லது கட்சி சார்பற்ற வாக்காளர்களோ இத் தேர்தலில் அதிகம் அக்கறை காட்டவில்லை. இதனாலேயே தென்னிலங்கையில் வாக்களிப்பு வீதம் குறைவாகக் காணப்பட்டது.
ஆனால் யாழ் மாவட்டத்தின் தேர்தல் களம் இவ்வாறானதல்ல. இப்போதுத்தேர்தலில் யாழ் மாவட்டத்தில் 15 கட்சிகளும் 12 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிட்டன. இத்தேர்தலின் பொது மேற்கொள்ளப்பட்ட விளம்பரங்களும் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளும் போல யாழ் மாவட்டத் தேர்தல் வரலாற்றில் எத் தேர்தலிலும் மேற்கொள்ளப்பட்டது கிடையாது. அந்தளவிற்கு யாழ் மாவட்டத்தில் தேர்தல் களைகட்டியிருந்தது (வேட்பாளர்கள் மத்தியில் மட்டும்) 324 வேட்பாளர்களும் இத்தேர்தலில் செலவிட்ட பணம் பல கோடிகளைத் தாண்டியிருக்கும். அதிலும் நான்கு அல்லது ஐந்து வேட்பாளர்கள் ஒவ்வொருவரினதும் தேர்தல் செலவுகள் ஒரு கோடி ரூபாவிற்கும மேல். இவ்வாறான நிலையிலும் கூட ஏன் மக்கள் தேர்தலில் ஆர்வம் காட்டவில்லை. இதற்குப் பல காரணங்கள் உண்டு.
1 . தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவு பட்டதினால் மக்களுக்கு ஏற்ப்பட்ட விரக்தி மனப்பான்மை.
2 . உண்மையில் தமிழ்த் தேசியத்தின் பால் உறுதியாக நிற்பவர்கள் யார் என்பதை இனம் காண்பதில் மக்களுக்கு ஏற்ப்பட்ட குழப்பம். வீடு, சைக்கிள் ஆகிய இரண்டு சின்னங்களுக்கும் வாக்களித்ததனால் பல வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன. இது அறியாமையால் ஏற்ப்பட்டதல்ல. இவ்விரண்டு கட்சிகளும் தங்களுக்குத் தேவை என்ற மன உணர்வின் வெளிப்பாடே இதுவாகும்.
3 . தங்களது உரிமைகள் தொடர்பாக பாராளுமன்றத்திற்க்குப் போய் யாரும் எதனையும் செய்ய முடியாது என்று மக்கள் நினைத்தமை.- பாராளுமன்ற அரசியலில் நம்பிக்கை இழந்தமை.
4 . இளைஞர்கள் இத்தேர்தலில் பெருமளவு அக்கறை காட்டாமை.
5 . அதிகளவு கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் இத் தேர்தலில் போட்டியிட்டதனால் மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பு.
6 . சில கட்சிகளினால் மேற்கொள்ளப்பட்ட அளவுக்கதிகமான விளம்பரங்களினால் மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பு. இத்தேர்தலில் செலவழிக்கப்பட்ட கோடிக்கணக்கான பணத்தை அகதி முகாம்களில் வாழும் குடும்பங்களின் புணர்வாழ்விற்குச் செலவிட்டிருக்கலாமே எனப் பலர் ஆதங்கப்பட்டனர்.
'நடைபெற்ற தேர்தலில் எந்தக்கட்சியும் தேர்தலைப் பகிஸ்கரிக்குமாறு கோரவில்லை. வெளி நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புக்களும் பகிஸ்கரிப்புக் கோரிக்கையை விடவில்லை. எனவே தோல்வி அடைந்தவர்கள் வாக்களிக்காமல் இருந்த மக்களை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது வேடிக்கையான விடயம்.' இது உங்கள் கூற்று
தமிழ் மக்கள் சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்க மாட்டார்கள். யாராவது சொல்வதைக் கேட்டுத்தான் செயற்படுவார்கள் என்பது தான் கட்டுரையாளரின் இக்கருத்தின் தொனியாகும். யாழ்ப்பாணத்து மக்கள் புத்திசாலிகள் என்று ஒருபக்கம் கூறிக் கொண்டு அவர்கள் சுய சிந்தனையற்றவர்கள் - சுயமாக முடிவெடுக்கத் தெரியாதவர்கள் என்றெல்லாம் கூறுவது வேடிக்கையான விடயம். இவ்விடத்தில் 1989 ம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் யாழ் மக்கள் மேற்கொண்ட தீர்மானத்தை நினைவு கூர்வது நல்லது. இந்திய இராணுவம் நிலைகொண்டிருந்த காலத்தில் நடைபெற்ற அத்தேர்தலில் ஈரோஸ் என்ற அமைப்பு சுயேட்சைக் குழுவாகப் போட்டியிட்டது. அப்போது வட - கிழக்கு மாகாண சபையை ஆட்சி செய்த ஈ .பி .ஆர் . எல். எவ் அணியும் தமிழர் விடுதலை கூட்டணியும் இணைந்து இந்தியாவின் ஆசியோடு இத்தேர்தலில் போட்டியிட்டது. (இன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான திரு. சுரேஷ் பிரேமச்சந்திரன் அன்று ஈ .பி .ஆர் . எல். எவ் அணியில் போட்டியிட்டமை ஒரு மேலதிகத் தகவல்)சுயேட்சைக் குழுவில் போட்டியிட்டவர்களின் பெயர் விபரங்கள் கூட மக்கள் அறிந்திருக்கவில்லை. இவ்வாறான நிலையிலும் கூட அச்சுயேட்சைக் குழு 63 சதவீதமான வாக்குகளைப் பெற்று மொத்தமாகவுள்ள 11 ஆசனங்களில் 8 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது. ஒரு சுயேட்சைக்குழு ஒரு மாவட்டத்தில் இவ்வாறான மாபெரும் வெற்றியைப் பெற்றது இலங்கையின் தேர்தல் வரலாற்றிலேயே இது தான் முதலும் கடைசியுமாக இருக்கும். இங்கு இச் சுயேட்சைக் குழுவிற்குத்தான் மக்கள் வாக்களிக்க வேண்டுமென யாரும் கோரிக்கை விடவில்லை. அன்றைய சூழ்நிலையில் இச்சுயேட்சைக்குழு எவருடைய ஆதரவோடு தேர்தலில் போட்டியிடுகின்றார்கள் என்பதை மக்கள் தாங்களாகவே ஊகித்துக் கொண்டு வாக்களித்தார்கள். எனவே யாருக்கு வாக்களிக்க வேண்டும். எப்போது தேர்தலைப் பகிஸ்கரிக்க வேண்டும். என்பவற்றை எல்லாம் மக்களுக்கு யாரும் கூற வேண்டிய அவசியமில்லை.
யாழ் நிர்வாக மாவட்டத்தின் (10 தேர்தல் தொகுதிகளின் ) வாக்காளர் கையில் ஏறத்தாழ
1,10,000 பேர் (30 சதவீதத்தினர்) இத்தேர்தலைப் புறக்கணித்துள்ளனர் என்பதே உண்மை நிலையாகும். மற்றுமொரு 30 சதவீதத்தினர் வழமையாக எந்தவொரு தேர்தலிலும் வாக்களிப்பில் கலந்து கொள்வதில்லை. இதன் படி யாழ் நிர்வாக மாவட்டத்தில் (10 தேர்தல் தொகுதிகள் ) 40 சதவீதத்தினர் மட்டுமே வாக்களித்துள்ளனர். எனவே யாழ்ப்பாணத்தில் மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கவில்லை என்று கூறுபவர்கள் தமது வெற்றி களங்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகச் செய்யும் பிரச்சாரமேயாகும்.
இரா துரைரத்தினம் அவர்களின் கட்டுரையில் கூறப்பட்ட ஏனைய விடயங்களின் மறு பக்கத்தை பகுதி - 02 இல் பார்ப்போம்.
S.வரதராஜன் B.A (Hons)
varatharajaninfo@gmail.com


