Sunday, April 11, 2010

யாழ் மாவட்டத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும் சில உண்மைகள்.


யாழ் தேர்தல் மாவட்டத்தின் பதிவு செய்யப்பட்ட வாக்காளர் தொகை 7,21,359 பேராகும். ஆனால் இது சரியான தரவு அல்ல. 2007 ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சனத்தொகைக் கணிப்பீட்டின் படி மாவட்டத்தின் மொத்தச் சனத்தொகை 5,59,619 பேராகும். இதில் 3,70,620 பேர் 18 வயதிற்கு மேற்ப்பட்டவர்களாவர். இவர்கள் அனைவரும் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டிருக்காவிட்டாலும் கூட யாழ் மாவட்டத்தின் உண்மையான வாக்காளர்களின் தொகை இதனை அண்மித்ததாகவே இருக்கும். இதனோடு கிளிநொச்சி தேர்தல் தொகுதி வாக்காளர் தொகையையும் (பதிவு செயப்பட்ட வாக்காளர் தொகை 90,811 பேர் - இதில் அரைவாசித் தொகையினை) சேர்க்கும் போது யாழ் தேர்தல் மாவட்டத்தின் உண்மையான வாக்காளர் தொகை ஏறத்தாழ நான்கு லட்சம் பேர் என மதிப்பிடலாம்.

அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 1,85,132 பேர் யாழ் தேர்தல் மாவட்டத்தில் வாக்களித்திருந்தனர். இது பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளில் 25.7 சதவீதமாகும். எனினும் உண்மையாகவுள்ள வாக்காளர் தொகையின் படி இது 46.3 சதவீதமாகும் தற்போது நடைபெற்ற பொதுத் தேர்தலில் 1,68,277 பேர் வாக்களித்துள்ளனர். இது பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளில் 23.3 சதவீதமாகும். எனினும் உண்மையாகவுள்ள வாக்காளர் தொகையின் படி இது 42.7 சதவீதமாகும். இத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு யாழ் மாவட்டத்து வாக்காளர்களின் மனோநிலையை ஆராய்வது பொருத்தமாக இருக்கும்.

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்தோர் தொகையிலும் பார்க்க பொதுத் தேர்தலில் வாக்களித்தோர் தொகை 16,855 பேரால் குறைவடைந்துள்ளது. இந்த நாட்டின் ஜனாதிபதியைத் தெரிவு செய்வதில் மக்கள் கட்டிய ஆர்வத்தைக் கூட தங்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதில் காட்டவில்லை என்பதனையே இது புலப்படுத்துகின்றது. இப்பொதுத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் 15 கட்சிகளும் 12 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிட்டன. சுவர்களின் நிறங்களே தெரியாதவாறு ஒட்டப்பட்ட சுவரொட்டிகள், வீதியெங்கும் வீசி இறைக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள், வேட்ப்பாளர்களின் விளம்பரங்களால் நிரப்பப்பட்ட பத்திரிகைகள், வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று செய்த பிரச்சாரங்கள், மக்களைக் கவர்வதற்காக இசைக்குழுக் கச்சேரிகளுடன் கூடிய பொதுக்கூட்டங்கள் இவை அனைத்தும் செய்யப்பட்டும் கூட வாக்காளர்களை வாக்களிப்பு நிலையங்களுக்கு அழைத்து வருவதில் தோல்வியே ஏற்ப்பட்டுள்ளது.

பொதுவாக தேர்தலில் 70- 75 சதவீத வாக்குகள் அளிப்பது வழமை.25-30சதவீதமான வாக்காளர்கள் வழமையாகத் தேர்தலில் வாக்களிப்பதில்லை. இதன் படி ஏறத்தாழ 2,80,000 வாக்காளர்கள் இத் தேர்தலில் வாக்களித்திருக்க வேண்டும். ஆனால் 1,68,277 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். இதன் படி ஏறத்தாழ ஒரு இலட்சத்திற்கும் மேற்ப்பட்ட வாக்காளர்கள் இத் தேர்தலில் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. இவர்கள் யார்? இவர்கள் வாக்களிக்க முன் வராமைக்கு என்ன காரணம்?

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு (மகிந்த ராஜபக்சேவிற்கு)44,154... மேலும் பார்க்கவாக்குகள் கிடைத்திருந்தன. இப்போதுத்தேர்தலில் இக்கட்சிக்கு 47,622வாக்குகள் கிடைத்தன. இது அனைவரும் எதிர்பார்த்ததே. அரசாங்கத்திற்கு ஆதரவான வாக்காளர்கள் அனைவரும் வாக்களித்துள்ளனர்.அவ்வாறாயின் தேர்தலில் பங்கு கொள்ளாமல் ஒதுங்கி நின்ற ஒரு லட்சம் வாக்காளர்கள் தமிழ்த்தேசியத்தின் பக்கம் நிற்பவர்களே ஆவார். தமிழ்த் தேசியத்திற்க்கான மக்கள் முன்னணி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆகிய இரண்டும் தமிழ்த்தேசியத்தின் பெயரிலேயே இத்தேர்தலில் போட்டியிட்டன. எனவே உண்மையில் தேசியத்தின் பக்கம் யார் நிற்கின்றார்கள் என்பதனை இனம் காண்பதில் மக்களுக்குக் குழப்பம் ஏற்பட்டுவிட்டது. பத்திரிகைகள் நடு நிலைமையில் நின்று இரண்டு பேரினதும் கருத்துக்களுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டிருக்குமேயானால் மக்களுக்குத் தெளிவு ஏற்ப்பட்டிருக்கும். அதிகளவு மக்களைச் சென்றடைகின்ற ஒரு பத்திரிக்கை நிறுவனத்தின் அதிபர் கூட்டமைப்பின் சார்பில் இத்தேர்தலில் போட்டியிட்டதனால் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியை வசை பாடும் கட்டுரைகளையும் செய்திகளையுமே அப்பத்திரிகை தொடர்ந்து வெளியிட்டது. இது ஓர் எதிர்மறையான விளைவுகளையே ஏற்ப்படுத்தியது. அதாவது கூட்டமைப்பிற்க்குப் போட்டியாக தமிழ்த் தேசியத்தை வலியுறுத்துகின்ற ஒரு கட்சியும் இத் தேர்தலில் போட்டியிடுகின்றது என்றொரு செய்தியை மட்டும் மக்களுக்கு எடுத்துச் சென்றது. ஆனால் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியே தமிழ்த் தேசியத்தை உறுதியாகப் பற்றி நிற்கின்ற கட்சி என்ற உண்மை மக்களுக்கு எடுத்துச் செல்லப்படவில்லை. இந்நிலையிலேயே இரண்டு கட்சிகளும் ஒன்றையே கூறுகின்றன என்ற ஒரு தவறான முடிவிற்கு மக்கள் வந்து, எதனை ஆதரிப்பது என்ற குழப்ப நிலை மக்களுக்கு ஏற்ப்பட்டது. இந்நிலையிலேயே இத்தேர்தலில் இருந்து மக்கள் ஒதுங்கும் நிலை ஏற்ப்பட்டது. தமிழ்த் தேசியத்தை உண்மையாக நேசிக்கின்ற இந்த ஒரு லட்சம் வாக்காளர்களும் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் பக்கம் நிற்க வேண்டியவர்கள். ஓர் சரியான ஊடக பலம் இருந்திருக்குமேயானால் இவர்களை வாக்களிப்பு நிலையத்திற்கு வரவழைத்திருக்க முடியும். தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியும் மாபெரும் வெற்றியடைந்திருக்கும்.

யாழ் மாவட்டத்தில் வாக்களிப்பு வீதம் குறைவாக இருந்தமைக்கு இங்கிருந்து வெளிவரும் பத்திரிகைகள் தார்மீக ரீதியில் பொறுப்பேற்க வேண்டும். இவை பத்திரிகை தர்மத்தை மீறி நடுநிலைமை தவறி செயற்ப்பட்டதனால் வந்த விளைவே இதுவாகும்.

சி. வரதராஜன்.

No comments: